வைகைச் செல்வன், பூனாட்சி, கே.சி. வீரமணி அமைச்சர்களாக பதவியேற்பு
சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மூன்று அமைச்சர்களும் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில், தமிழக ஆளுநர் ரோசய்யா, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கே.சி.வீரமணிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வைகைச் செல்வனுக்கும், கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டி.பி.பூனாட்சிக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவிபிரமாணத்தின் போது முதல்வர் ஜெயலலிதா உடனிருந்தார். இதனைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் ஆளுநர் ரோசய்யா மற்றும் முதல்வர் ஜெயலலிதா உடன் இணைந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
8 வது முறையாக மாற்றம்
தமிழக அமைச்சரவையில் 8-வது முறையாக மாற்றங்கள் செய்து, முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பரிந்துரை செய்தார்.

இதன்படி,பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சட்டம், நீதிமன்றங்கள், சிறை, பணியாளர் நலன், ஊழல் தடுப்பு ஆகிய இலாகாக்களை கவனித்து வந்த என்.ஆர்.சிவபதி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜய் நீக்கப்பட்டார். மேலும், சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திராவும் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications