தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!

இனவெறியின் உச்சக்கட்டக் கொடுமைகள் ஈழத்தில் அரங்கேறின. இப்போதும் அது தொடர்ந்து கொண்டே உள்ளது.
இலங்கையில் வாழ்ந்த தமிழர்களில் பல லட்சம் பேர், உயிரைப் பணயம் வைத்து பல்லாயிரம் மைல்கள் சிறு சிறு படகுகளில் பயணித்து கிடைக்கிற நாட்டில் தஞ்சமடைகின்றனர்.
பெரும்பாலும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நார்வே போன்ற நாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிங்கள வெறியர்களின் கொடுமையை அனுபவித்து கேவலப்படுவதை விட, அந்நிய மக்கள் தயவில் அகதிகளாகவே இருந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் செல்கின்றனர்.
இப்படி கடல் வழியே படகில் போகும் தமிழர்களில் பலர் நடுக்கடலில் மடிந்து போவதும் நடக்கிறது.
கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, கடல்வழியே பிரிட்டனுக்கு வந்த தமிழர்கள் மீது, தேவையான ஆவணங்கள் இன்றி வந்ததாக கைது செய்த போலீசார் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பின்னர் நீதிமன்றம் அவர்கள் நாடுகடத்தபடவேண்டும் என்று அப்போதே உத்தரவிட்டுவிட்டது. இதை எதிர்த்து அங்குள்ள மனித உரிமை அமைப்புகளின் துணையுடன் தமிழர்கள் சிலர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டின் மீதான வழக்கு, நேற்று நீதிபதி விக்கி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிந்து நேற்றே தீர்ப்பையும் வழங்கினார் நீதிபதி விக்கி. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
அந்தத் தீர்ப்பில், "இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மோசமான கொடுமைகள் நடத்தப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இதைப் புறக்கணிக்க முடியாது. மேலும் இலங்கையின் நிலைமையைப் பார்க்கிறபோது, அவர்களை அங்கு திருப்பி அனுப்புவதும் முறையல்ல. மனிதாபிமான அடிப்படையில், அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவருக்கும் அகதிகளாக, பிரிட்டனில் வாழ முழு உரிமை உள்ளது. தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து, இங்கு முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். போதுமான ஆவணம் இன்றி இருந்தவர்கள் நாடு கடத்தப்படவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கிறேன். அவர்கள் தொடர்ந்து இங்கேயே இருக்கலாம். பிரிட்டன் வரலாற்றிலேயே, இத்தகைய தீர்ப்பு வருவது இதுவே முதல்முறை என்பதை இந்த நீதிமன்றம் நம்புகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
கடைசி நிமிடங்களில்...
நேற்று இரவு 60 தமிழர்கள் தனி விமானமொன்றில் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்தார்கள். இந்த நிலையில்தான் இந்த தீர்ப்பு வெளியானது.
ஏற்கெனவே பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 15 தமிழர்கள், ராணுவம் மற்றும் போலீசின் கொடுமை தாங்காமல் மீண்டும் பிரிட்டனுக்கே தப்பி வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் நுழைய முறையான குடியுரிமை பெறுவது அத்தனை சுலபமான விஷயமல்ல. இதனாலேயே பலரும் இப்படி சட்டவிரோதமாக நுழைந்துவிடுகிறார்கள். லண்டன் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பிரிட்டிஷ் உள்நுழைவு விதிகளில் மாற்றங்கள் கொண்டுவருமா? பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications