பாலச்சந்திரன் படுகொலை : 'பச்சை' பொய் பேசும் ராஜபக்சே: டாக்டர் ராமதாஸ்
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலை செய்யவில்லை என்று பச்சை பொய்யைப் பேசியிருக்கிறார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப்படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும், கொந்தளிப்பிலும் இருக்க, பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே. அதுமட்டுமின்றி இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தனது கடமை என்பதை இந்தியா அறியும் என்றும் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அதாவது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து நாங்கள் பிரச்சினை எழுப்ப வேண்டியிருக்கும் என ராஜபக்சே மறைமுகமாக மிரட்டியிருக்கிறார். ராஜபக்சேவின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.இதற்கு பிறகாவது ராஜபக்சேவின் உண்மை முகத்தை புரிந்து கொண்டு இலங்கை பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவேண்டும். ஆனால் சீனா பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி இலங்கைக்கு சாதகமாகவே மத்திய அரசு நடந்து கொள்கிறது.
ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடமைகளை பறித்துக்கொண்டு அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அதற்கு ரூ.500 கோடியை நிதியுதவியாக அளித்திருக்கிறது இந்திய அரசு.ஈழத்தமிழர்களின் மறு வாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காகவும், சிங்களப்படையினருக்கு சிறப்பு வசதிகளை செய்து தருவதற்காகவும் இலங்கை அரசு செலவழித்து வரும் நிலையில் அந்நாட்டிற்கு இந்தியா மேலும் மேலும் நிதி உதவி அளிப்பது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்கத்தான் பயன்படுமே தவிர, தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. அதேபோல், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவரும் விசயத்திலும் இலங்கைக்கு சாதகமாகவே இந்திய அரசு நடந்து கொள்கிறது.
இந்த விசயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு, மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் இருக்கவும், கருத்தொற்றுமை என்ற பெயரில் உப்பு சப்பில்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்தியாவை மிரட்டும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜ பக்சேவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமே தவிர, அவருக்கு பணிந்து ரூ.500 கோடி பரிசு வழங்கக்கூடாது. எனவே இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரத்து செய்வதுடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications