பெண் கிடைக்கலை… பணத்துக்கும் எருமைக்கும் பெண்ணை விலைக்கு வாங்கும் ம.பி. மாப்பிள்ளைகள்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் மணப்பெண்கள் பற்றாக்குறையால் பணத்தையும், எருமை மாட்டையும் கொடுத்து விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள அசோக்நகர், குனா போன்ற மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை காரணமாக மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.
இதனால் பெண்களின் விகிதாச்சாரம் குறைந்து ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. நீண்ட நாட்களாக பெண் கிடைக்காத காரணத்தால் அலையோ அலை என்று அலைந்து கடைசியில் பெண்ணை காசு கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் ம.பி. மணமகன்கள்.

பெண் சிசுக் கொலை
அதிகரித்து வரும் தங்கம் விலை... வரதட்சணை கொடுக்க தடுமாறும் பெற்றோர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை கொன்று விடுகின்றனர். சிலர் கருவிலேயே அழித்துவிடுகின்றனர். மத்திய பிரதேசமாநிலத்தில் சில மாவட்டங்களில் இந்த கொடுமை அதிகம் நடைபெறுகிறது.

பெண் கிடைக்கலையே
ஆண் குழந்தைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துவிட்டதால் மணப்பருவத்தில் நிற்கும் பல ஆண்களுக்கு தற்போது மணப்பெண்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விலைக்கு வாங்கும் கொடுமை
பெண் கிடைக்காமல் தடுமாறும் மணமகன் வீட்டார் இடைத்தரகர்களை நாடுகின்றனர். அந்த இடைத்தரகர்களுக்கு ஆள் கடத்தும் கும்பல்களுடன் தொடர்பு உள்ளதால் பெண்களை கடத்தி வந்து மணமுடித்து வைக்கின்றனர்.

மகாராஷ்டிரா பெண்கள்
மகாராஷ்டிராவில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து மணமகளை விற்பனை செய்கின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 14 முதல் 16வயது வரையான 3 பேரை கடத்தி மத்திய பிரதேசத்தில் ரூ35 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை விற்றுள்ளனர்.

எருமை மாட்டுக்கு மணப்பெண்
ரூ50 ஆயிரத்துக்கு விற்பனை செய்த பெண்ணுக்கு தரகர்கள் நிர்ணயித்த தொகை ரூ75 ஆயிரம். அந்த அளவுக்கு மணமகனிடம் பணம் இல்லாததால் ரூ25 ஆயிரத்துக்கு பதிலாக எருமையை பெற்றுக் கொண்டு பெண்ணை விற்றுள்ளனர்.

பெண்களை மீட்ட போலீசார்
பெண்களை காணவில்லை என்ற புகாரின் பேரில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்ட போலீசார் மத்திய பிரதேசம் சென்று அந்த பெண்களை மீட்டனர்.

வறுமையே காரணம்
‘வறுமை, போதுமான விழிப்புணர்ச்சி இல்லாமை காரணமாக பாதிக்கப்படும் பெண்களும் அவர்களது குடும்பத்தாரும் போலீசில் புகார்கள் அளிப்பதில்லை. விற்பனை செய்யப்படும் பெண்களை வாங்கும் மணமகன் அந்த பெண்ணை மனைவியாக்கி கொள்வதால் அந்த பெண்கள் புகார் தர தயங்குகின்றனர். இதனால், போலீசாருக்கு இதுபோன்ற குற்றங்களை தடுப்பது கடினமாக உள்ளதாம்.

பெண் குழந்தைகளை கொன்றால்
வரதட்சனைக்கு பயந்து பெண் குழந்தைகளை கொலை செய்யும் சூழல் தமிழ்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டில் ஏற்படும் முன்னர் விழித்துக் கொள்வதே நல்லது.












Click it and Unblock the Notifications