நவீன ஹோசி மின்னாக உருவெடுத்துள்ளார் கருணாநிதி.. தமிழீழம் மலரும் - ராசா

காட்பாடியில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராசா பேசுகையில்,
தமிழக அரசியல் வரலாற்றை சுருக்கிப் பார்த்தால் பக்தவச்சலம், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என ஒவ்வொருவருக்கும் தனி அடையாளங்கள் இருக்கிறது.
குலக்கல்வித் திட்டம் என்பது ராஜாஜியின் அடையாளம், கிராமங்கள்தோறும் பள்ளி என்பது காமராஜரின் அடையாளம், சத்துணவு என்பது எம்ஜிஆரின் அடையாளம். கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டுசென்றது, பெண்களுக்கும் சொத்தில் பங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு அடையாளங்கள் கலைஞருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு என்ன அடையாளம் உள்ளது?
ஜெயலலிதாவுக்கு எந்த அடையாளமும் இல்லை. அரசிதழில் காவிரி தொடர்பாக அரசாணை வெளியிட்டது, தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியது தனது சாதனை என்கிறார்.
பதவி, ஆட்சியில் இருக்கும்போது சிலநேரம் சரிவு ஏற்படுகிறது. பதவி மட்டுமே வெற்றியின் அளவுகோல் அல்ல. 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட நான் எந்தத் தவறும் செய்யவில்லை. செல்போன் கட்டணம் ரூ. 1 என்பதை 30 காசாக குறைத்தது, சராசரி தொலைபேசிக் கட்டணம் ரூ.300 என்பதை ரூ.100 ஆக்கியது, 30 கோடி பேர் பயன்படுத்திய செல்போன்களை 90 கோடி பேருக்கு கொண்டு சென்றது ஆகிய மூன்றுதான் நான் செய்த தவறுகள்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படம் தயாரிக்கப்பட்டவை என இலங்கை அதிபர் ராஜபட்ச கூறுகிறார். அவருக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒரு வியட்நாம் திரும்பும்.
வியட்நாம் போரின்போது 9 வயது சிறுமி குண்டு வீச்சுகளுக்கு நடுவில் நிர்வாணமாக ஓடும் படம் வெளியானது. இது ஹோசிமின் புரட்சிக்கு வித்திட்டது. அதேபோல, பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படம் வெளியாகியுள்ளது. இப்போது ஒரு ஹோசிமின் உருவாகியுள்ளார். அவர்தான் கலைஞர். போர்படை தளபதியாக ஸ்டாலின் இருக்கிறார். வியட்நாம் போல விரைவில் தமிழீழம் வெல்லும் என்றார் ராசா.












Click it and Unblock the Notifications