லஞ்சம் விவகாரம்: பங்காரு அடிகளார் மனைவி மகன்களிடம் இன்றும் சி.பி.ஐ. விசாரணை
சென்னை: பல் மருத்துவமனையில் மேற்படிப்பு தொடங்க லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளிடம் இன்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புக்கு அனுமதி பெறுவதற்காக இந்திய பல் மருத்துவ கல்வி கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசனுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் டாக்டர் முருகேசன், கல்லூரி நிர்வாகிகள் ராமபத்திரன், கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. பழனி உட்பட பலரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த வழக்கில், லஞ்சப்பணம் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் லட்சுமி பங்காரு, அவரது மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.இதையடுத்து லட்சுமி உட்பட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். சென்னை ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் சென்னை சி.பி.ஐ. கோர்ட்டிலும் லட்சுமி, அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி, முன்ஜாமீன் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் டி.எஸ்.பி, பிரதீப்குமார் தலைமையில் நடந்த விசாரணைக்காக லட்சுமி, அன்பழகன், செந்தில்குமார் ஆகிய 3 பேரும் நேற்று காலை 10.30 மணிக்கு சி.பி.ஐ, அலுவலகத்திற்கு வந்தனர். உடன் வக்கீல்களையும் அழைத்து வந்திருந்தனர். இவர்கள் வருகையையொட்டி சி.பி.ஐ. அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 11 மணிக்கு 3 பேரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் லஞ்சப்பணம் கொடுத்தது தொடர்பாக சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் லஞ்சப்பணம் எப்போது, எவ்வளவு தொகை கைமாறியது, எந்தெந்த வழிகளில் வழங்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தாக கூறப்படுகிறது.
மூன்று பேரிடமும், டி.எஸ்.பி. பிரதீப்குமார் தலைமையில், 3 இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. அதிகாரிகள் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, விசாரணை இன்றும் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications