4 தொகுதிகளில் ஜெ. வேட்புமனு: வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிபட்டி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தர விட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், தேர்தல் அதிகாரியிடம் விரிவான விளக்கத்தை கேட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பினை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications