கேரளாவில் கொடூரம்: 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண், பிழைப்பு தேடி தன் 3 வயது குழந்தையுடன், கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு சென்றார். திரூர் என்ற ஊருக்கு சென்ற அவர்களுக்கு கடை ஓரத்தில் இருக்க இடம் கிடைத்தது. அங்கு தங்கிக் கொண்டு அக்கம் பக்கத்தில் கிடைத்த வேலைகளை பார்த்து இருவரும் சாப்பிட்டு வந்தனர். வீடு எதுவும் இல்லாத காரணத்தால் இரவு நேரத்தில் அங்குள்ள கடை வளாகம் ஒன்றில் நிரந்தரமாக வசித்து வந்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவில், தாயும் அந்தக்குழந்தையும் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு, படுத்து உறங்கினர். மறுநாள் காலையில் விழித்துப்பார்த்தபோது, தன் அருகில் படுத்து இருந்த குழந்தையை காணாமல், தாய் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, இதுபற்றி அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும், குழந்தையின் தாயும், அக்கம் பக்கத்தினரும் அந்தப்பகுதி முழுவதும் குழந்தையை தேடினார்கள். அப்போது ஒரு கட்டிடத்தின் அருகில், உடல் முழுவதும் எறும்புகள் மொய்த்தபடி, மயங்கிய நிலையில் அந்தக்குழந்தை கிடந்ததை அவர்கள் கண்டு பிடித்தனர்.
குழந்தையை தூக்கியபோது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடல் முழுவதும் காயங்களும் இருந்தன. இரவில் அந்தக் குழந்தையை சில காமுகர்கள் கடத்திச்சென்று, பலாத்காரம் செய்துவிட்டு அந்தக் கட்டிடத்தின் அருகில் வீசி விட்டு சென்று இருப்பது அப்போது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட அந்தக்குழந்தையை உடனடியாக திரூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்தக்குழந்தைக்கு 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. தற்போது அந்தக்குழந்தை நலமாக இருப்பதாவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கேரளா மாநில மகளிர் ஆணைய தலைவி கே.சி. ரோசா குட்டி கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்தக்குழந்தையையும், தாயையும் பார்த்து ஆறுதல் கூறினார்.
"பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தாயையும், குழந்தையையும் மகளிர் நல வாரியமே பாதுகாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
8-ந்தேதி (நாளை) முதல்வர் உம்மன் சாண்டி கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு வந்து இந்தக் குழந்தையை பார்க்க இருக்கிறார். அவருடன் பேசி, தாய்க்கும், குழந்தைக்கும் எந்த வகையில் உதவி செய்யலாம்? என்று இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நேற்று பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து திரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "குழந்தையை சீரழித்தவர்களை கண்டு பிடிக்க சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், சந்தேகத்தின் பேரில் 14 பேரை உடனடியாக பிடித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது" என்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ரெட்டி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications