புதிய சரித்திரம் படைக்க பெண்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு
சென்னை: தோல்விகளை வெற்றிப் படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட மகளிர் தினத்தில் பெண்கள் உறுதியேற்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
பெண்ணின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ம் நாள் 'சர்வதேச மகளிர் தினமாக' கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், அனைத்து மகளிருக்கும் எனது உளங்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
"ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே" என்று பாடிய மகாகவி பாரதியார் பிறந்த இந்த இந்திய திருநாட்டில், பெண்கள் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, தோல்விகளை வெற்றிப் படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட எழுச்சியுடன் வீறுநடை போட இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.
மகளிருக்குத் திட்டங்கள்
உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு, மகளிர் வாழ்வு மேம்பட பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெண் சிசுக் கொலையைத் தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம்; இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்; ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம்; மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு; இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம்; பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் சுய உதவிக் குழுக்கள்; வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் ஆகியவையும் செயல்பாட்டில் உள்ளது.
இந்தியாவிற்கே முன்னோடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கிட 13 அம்ச திட்டம்; சிறந்த பெண்மணிக்கு "அவ்வையார் விருது" போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அறிவுக் கண் திறந்து, ஆக்கபூர்வமாய் பணியாற்றி, உலகை வாழவைக்கும் பெண்ணாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்து, எனது உளங்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications