சென்னை லயோலா மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டம் மட்டும் திடீர் வாபஸ்!

போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரியும், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வலியுறுத்தி கோயம்பேட்டில் லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் 4- வது நாளாகத் தொடர்ந்தது. இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்துவந்த 8 மாணவர்களை அதிகாலை 2 மணிக்கு போலீஸார் கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திரண்டிருந்த 126 பேரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் 8 மாணவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்படுகிறது. அவர்கள் வேறு எதையும் சாப்பிட மறுத்து அங்கும் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர். இந்த மாணவர்களை லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் ஜெயசீலன் என்பவர் இன்று சந்தித்துப் பேசினார். அவர் செய்தியாளர்களிட பேசுகையில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராடத்தைக் கைவிட்டுவிட்டு வேறுவழிகளில் போராட வேண்டும் என்றார்.
இந்த நிலையில் இன்று மாலை திடீரென அவர்களது போராட்டம் முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு லயோலா கல்லூரி முதல்வர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இருப்பினும் தங்களது போராட்டம் வாபஸ் பற்றி கருத்து தெரிவித்த மாணவர்கள், தாங்கள் தொடங்கி வைத்த போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இதைத் தொடர்ந்து எங்களது இந்தப் போராட்டத்தை முடித்துக் கொண்டு அடுத்த கட்ட போராட்டங்களை பின்னர் அறிவிப்போம் என்றனர்.












Click it and Unblock the Notifications