இலங்கை தமிழர் விவகாரம்.. நாடாளுமன்றத்தில் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு
டெல்லி: இலங்கைத் தமிழர் விவகாரம், ராபர்ட் வதேரா நில விவகாரங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பெரும் அமளி நிலவியது. இதனால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட லோக்சபாவும் ராஜ்யசபாவும் பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
லோக்சபாவில் இன்று காலை கூடியதும் சபாநாயகர் மீராகுமார், முன்னாள் உறுப்பினர் வீரென் ஷா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார். அதை தொடர்ந்து இலங்கை தமிழர் விவகாரம், ராபர்ட் வதேரா நில விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைக்காக அமளி ஏற்பட்டது. இதனால் லோக்சபா முடங்கியது.
திமுக எம்பி டி.ஆர்.பாலு அவையின் மைய பகுதிக்கு சென்று பிரபாகரனின் 12 வயது மகன் பிணை கைதியாக வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட படத்தை காண்பித்து கோஷமிட்டார். மற்ற திமுக உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.
இதேபோல அதிமுக உறுப்பினர்களும் அவையின் மைய பகுதிக்கு வந்து இலங்கை தமிழர் பிரச்சனையைக் கிளப்பினர்.
பாஜக எம்பிக்கள் சோனியா காந்தியின் மருமகன் வதோராவின் நில மோசடி விவகாரம் தொடர்பாக கோஷமிட்டனர்.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சபாநாயகர் கேள்வி நேரத்தை எடுத்தார். உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவரால் சபையை நடத்த இயலவில்லை. இதை தொடர்ந்து சபாநாயகர் மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.
பின்னர் அவை கூடியதும் இதே பிரச்சனைகளை முன் வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. மீண்டும் இதே பிரச்சனைகளால் அவையில் அமளி நிலவியதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதே போல ராஜ்யசபாவிலும் இலங்கை தமிழர், வதேரா நில மோசடி உள்பட பல்வேறு பிரச்சனைகள் கிளப்பப்பட்டு தொடர்ந்து அமளியும் ஏற்பட்டது. இதனால் ராஜ்யசபாவும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications