திருச்சியில் கே.என். ராமஜெயம் சிலையை திறந்து வைக்கும் மு.க. ஸ்டாலின்
திருச்சி: திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பியும், தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் சிலையை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலை நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. ஸ்ரீதரின் நேரடி கண்காணிப்பில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் இந்த கொலை வழக்கில் அரசியல், காண்டிராக்ட், கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்தது, வெளிநாடுகளில் கிரானைட் குவாரி தொழில் விவகாரம், பெண் பிரச்சனை, குடும்பத்துக்குள் மோதல் என பல கோணங்களிலும் விசாரணை நடத்தினர். கொலை நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கே.என். ராமஜெயம் குடும்பத்திற்கு சொந்தமான கல்லூரி ஒன்று திருச்சி- மணப்பாறை சாலையில் உள்ளது. இந்த கல்லூரியில் ராமஜெயம் சிலை ஒன்று வைக்கப்பட உள்ளதாம்.
இந்த சிலையை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாராம். இதற்கான அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டுள்ளதாம். விரைவில் திறப்பு விழா தேதி வெளியாகலாம் என கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications