பாஜகவை ஒழிப்பதே என் முதல் இலக்காக இருந்தது; அதில் வெற்றி பெற்றுவிட்டேன்: எதியூரப்பா

உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதுமே பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. பாஜகவுக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவுக்கு எதியூரப்பா வாக்கைப் பிரித்ததே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இதனால் காங்கிரசும், தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும் எந்த நல்ல வேலையும் செய்யாமலேயே வெற்றிக் கனியை ருசித்துள்ளன.
மே மாதம் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு இந்த மாபெரும் தோல்வி கிடைத்துள்ளது.
அதே சமயம் எதியூரப்பா கட்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. எதியூரப்பாவின் சொந்த மாவட்டமான ஷிமோகாவில் உள்ள 176 வார்டுகளில் கர்நாடக ஜனதா கட்சி வெறும் 34 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 64 வார்டுகளும், கெளடா கட்சிக்கு 40 வார்டுகளும், பாஜகவுக்கு 24 வார்டுகளும் கிடைத்துள்ளன.
பாஜகவிலிருந்து விலகிய ரெட்டி சகோதரர்களின் வலது கரமான ஸ்ரீராமுலு தொடங்கிய பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெல்லாரியில் வெறும் 86 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இவருடைய கட்சியாலும் பாஜகவின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள தெளிவாக தெரிகிறது.
மொத்தம் 7 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக ஹூப்ளி-தார்வாடில் மட்டுமே வென்றுள்ளது. அங்கு கூட தனி மெஜாரிட்டிக்கு இன்னும் ஒரு இடம் தேவைப்படுகிறது. இதற்காக சுயேச்சைகளுக்கு வலை வீசிக் கொண்டுள்ளது பாஜக.
எதியூரப்பா மிக்க மகிழ்ச்சி:
பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து தனது பெரும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் எதியூரப்பா. நிருபர்களிடம் அவர் பேசுகையில், நான் இல்லாத பாஜக இவ்வளவு வேகமாக கீழ் மட்டத்திற்கு வந்துவிட்டது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை ஒழிப்பது தான் எனது முதல் இலக்காக இருந்தது. அதேபோல் அந்த கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஏனென்றால் எனக்கு எதிராக அந்த கட்சி தலைவர்கள் குழி தோண்டினர். அந்த கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர்.
எனது அடுத்த இலக்கு சட்டசபை தேர்தல் தான். அந்தத் தேர்தலில் தீவிரமாக செயலாற்றுவேன். பாஜகவின் வளர்ச்சியில் என்னுடைய முக்கியத்துவத்தை இப்போதாவது மேலிடத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சி 274 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதைவிட அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. என்றாலும் கட்சி ஆரம்பித்து சிறிது காலத்திலேயே நாங்கள் தேர்தலை சந்தித்தோம். அதனால் இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியை வழங்கியுள்ளது. திருப்தியை தருகிறது.
அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எக்காரணத்தை கொண்டும் நான் மீண்டும் பாஜகவில் சேர மாட்டேன். இதுபற்றி வெளி வரும் செய்திகள் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். நான் இல்லாத பாஜக இவ்வளவு வேகமாக செல்வாக்கு குறைந்து, மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சி தோல்வியை தழுவியுள்ளது. நான் ஜெகதீஷ் ஷெட்டர் இடத்தில் இருந்திருந்தால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன். ஒரு நிமிடம் கூட பதவியில் நீடித்திருக்க மாட்டேன்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பெருமை பேசி வந்த பாஜகவினர் இனிமேலாவது ஒழுங்காக மக்கள் பணியாற்ற வேண்டும். அரசு கஜானாவை காலி செய்ததே பாஜகவின் சாதனையாகும். கர்நாடகத்தில் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்து வருகிறது. பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ஊழல் புகார்களில் சிக்கி வருவதே இந்த அரசின் சாதனையாக உள்ளது.
என்னை அதிகாரத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு கொண்டாடியவர்கள் இன்று சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். என்னை பலிகடா ஆக்கியவர்களுக்கு இந்த தேர்தல் பதில் அளித்துள்ளது.
உடுப்பியில் கடந்த 40 ஆண்டு காலமாகவும், புத்தூரில் 20 ஆண்டு காலமாகவும் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. இவை பாஜகவின் கோட்டையாக இருந்து வந்தன. ஆனால் இந்த முறை அந்த இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்திருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தையே தந்துள்ளது.
நான் இல்லாத பாஜக இவ்வளவு வேகமாக செல்வாக்கை இழந்து கீழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலிடத் தலைவர்கள் இப்போதாவது என் பலத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும். "விதானசவுதாவை நோக்கி எங்கள் பயணம்" என்ற முழக்கத்துடன் எனது பிரச்சாரப் பயணத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவோ, பின்னரோ எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டேன். சட்டசபை தேர்தலில் எங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எங்கள் கட்சி மறைமுகமாக செயலாற்றவில்லை. நான் எங்கள் கட்சியை பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications