ஸ்ரீநகரில் கிரிக்கெட் வீரர்கள் போல் வந்த தீவிரவாதிகள், பல உயிரைக் காத்த பந்த்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பெமினா பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படையின் முகாம் மீது தீவிரவாதிகள் இன்று காலை தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து அங்குள்ள பள்ளி அருகே ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 தீவிரவாதிகள் அங்கு இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முகாமைத் தாக்கிய பிறகு 2 தீவிரவாதிகள் தப்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது. பெமினா போலீஸ் அகாடமி பகுதியை தீவிரவாதிகள் ஏற்கனவே தாக்கியதால் அங்கு எப்பொழுதும் பாதுகாப்பு பலமாக இருக்கும். பெமினாவில் போலீஸ்காரர்கள் குடியிருப்பு மற்றும் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்று உள்ளது. ஸ்ரீநகரில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலைக் கேட்டு இன்று பந்த் நடைபெற்று வருகிறது.
இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் துப்பாக்கிச்சூடு நடந்து வரும் இடத்தில் உள்ள பள்ளியும் இன்று மூடப்பட்டுள்ளது. பந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படாமல் இருந்துள்ளது. தீவிரவாதிகள் விளையாட்டு வீரர்கள் போல் உடை அணிந்து கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பொருட்கள் வைக்கும் பையில் குண்டுகள், ஆயுதங்களை எடுத்து வந்துள்ளனர். அவர்கள் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினர். பின்னர் முகாமைத் தாக்கினர்.
பெமினா பகுதி 1ஏ தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் ரோட்டுக்கு அருகில் உள்ளதால் தீவிரவாதிகள் நெடுஞ்சாலை வழியாக வந்துவிட்டு தப்ப வசதியாக உள்ளது.
இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாகவும், அவர்கள் லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications