கொடைரோட்டில் பெண் பயணி மீது தாக்குதல்: டோல்கேட் ஊழியருக்கு சரமாரி அடி-உதை
கொடைரோடு: திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலை கொடை ரோடு டோல்கேட்டில் தகறாறு செய்த டோல்கேட் ஊழியர்கள் கண்டக்டர், பெண் பயணியை தாக்கியதால், ஆத்திரமடைந்த சக பயணிகள் டோல்கேட் ஊழியர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
திருப்பூருக்கு தென்காசியிலிருந்து சிறப்பு அரசு பஸ் சென்றது. பஸ்சில் கிட்டதட்ட 50 பயணிகள் பயணம் செய்தனர். நேற்று மதியம் 3.30 மணிக்கு இந்த பஸ் கொடைரோடு டோல்கேட்டிற்கு வந்தது. அப்போது சிறப்பு பேருந்துக்கு நுழைவு கட்டணம் கட்டுமாறு , டோல்கேட் ஊழியர்கள் கூறினர்.
இது மாற்று அரசு பஸ் தான் என கூறி, ஆதாரத்திற்கு சம்மந்தப்பட்ட பேருந்துக்கான அரசு அனுமதி சீட்டை பஸ் டிரைவர் டோல்கேட் ஊழியர்களிடம் கொடுத்தார். இதனை டோல்கேட் ஊழியர்கள் வாங்க மறுத்தனர். இதனால் கண்டக்டருக்கும் டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி, டோல்கேட் ஊழியர்கள் டிரைவர், கண்டக்டரை தாக்கினர். இதை பார்த்து அதிர்ந்த பயணிகள் பஸ்சை விடச்சொல்லி, டோல்கேட் ஊழியர்களிடம் எடுத்துக் கூறினர். திடீரென டோல்கேட் ஊழியர் ஒருவர், பஸ்சில் பயணம் செய்த, பெண் பயணி ஒருவரை தாக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த பஸ் பயணிகள் அனைவரும், பஸ்சிலிருந்து இறங்கி, டோல்கேட் ஊழியரை அடிக்க ஆரம்பித்தனர். இச்சம்பவத்தை கண்டு அந்த வழியில் சென்ற அனைத்து அரசு பஸ் டிரைவர்கள், பஸ்களை டோல்கேட்டை மறித்து, குறுக்காக நிறுத்தினார்கள்.
மேலும் அனைத்து பஸ் பயணிகளும், டோல்கேட்டை முற்றுகையிட்டு, ஊழியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரம் மதுரை-திண்டுக்கல் 4-வழிச்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, நெடுஞ்சாலைதுறை ரோந்து வாகன போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, அம்மையநாயக்கனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் மற்றும் போலீசார் டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.












Click it and Unblock the Notifications