கொளுத்தும் வெயில்… கொடைக்கானல்,உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்
உதகை: வசந்த காலத் தொடக்கத்திலேயே வாட்டி வதைக்கிறது வெயில்... கோடைக்கு இதமாக கொஞ்சம் மழை பெய்தால் போதும் என்று ஏங்குகிறது மனம்.
தமிழ்நாடு முழுவதும் வெப்பம் வாட்டினாலும் கொடைக்கானல், உதகமண்டலம் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் குளு குளு சீசன் நிலவுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த இதமான மழையால் அங்கு இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும், தேனிலவு தம்பதியரும் உதகமண்டலத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் உதகையில் தாவரவியல் பூங்கா, ரோஜாபூங்கா படகு இல்லம் போன்றவை சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.

இதம் தரும் குளுமை
உதகையில் கடந்த 4 மாதங்களாக கடும் பனிப்பொழிவு, குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் காணும் இடமெங்கும் பசுமை திரும்பியுள்ளது.

நீந்திச் செல்லும் மேகக் கூட்டம்
உதகையில் இரு தினங்களாக, மேக மூட்டத்துடன் வானம் காட்சியளிக்கிறது. இதனால் குளு குளு காலநிலை நிலவுகிறது. அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்றவை மே மாதம் நடத்தப்பட உள்ள கண்காட்சிகளுக்காக தயாராகி வருகின்றன.

கண்ணைக் கவரும் பசுமை
தாவரவியல் பூங்காவின் பசுமையும், மலர்ந்து சிரிக்கும் மலர்களும் சுற்றுலா பயணிகளை குதூகலத்தில் ஆழ்த்தி வருகிறது.

படகு இல்லத்தின் பொலிவு
கோடை சீசனுக்காக தற்போது படகு இல்லம் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் சீசனுக்கு படகில் உல்லாச பயணம் சென்று வருகின்றனர் சுற்றுலா பயணிகள்.

கொடைக்கானலில் குளுமை
கொடைக்கானலில் வழக்கமாக, ஏப்ரல் முதல் வாரத்தில் கோடை காலத்திற்கான குளுகுளு சீசன் துவங்குவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்துப் போனதால், கொடைக்கானலில் கடும் வறட்சி நிலவி வந்தது. தற்போது விட்டுவிட்டு பெய்த சாரல் மழை கராணமாக, குளுமை திரும்பியுள்ளது.

நீர்வீழ்ச்சிகளின் அழகு
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், வெறும் பாறையாக இருந்த வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பாம்பாறு நீர் வீழ்ச்சிகளில் ஓரளவுக்கு தண்ணீர் கொட்டுகிறது.

மலர்ந்து சிரிக்கும் மலர்கள்
பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர்ச்செடிகள் பசுமையாக கண்களுக்கு விருந்து படைகின்றது. பகல் நேரங்களில், குளுகுளு தட்பவெப்ப நிலை நிலவி வருகின்றது.

அலைமோதும் பயணிகள்
இதனால் கொடைக்கானலில் இப்போது முதலே சீசன் களை கட்ட துவங்கிவிட்டது. கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா மையமான கோக்கர்ஸ் வாக், பசுமைப்பள்ளத்தாக்கு, பூம்பாறை, குணா குகை, வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் தினமும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
கோடையில வாடுறவங்க ஒரு ரவுண்ட் போயிட்டு வாங்களேன்.











Click it and Unblock the Notifications