பிறந்து 6 நாளான குழந்தை பலி-உறவினர்கள் மருத்துவமனை முற்றுகை
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாளான குழந்தை இறந்தது. இதனால் டாக்டர்களை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் காளிராஜ். ஆட்டோ டிரைவரான இவரது மனைவி மாரியம்மாள். இவர் கடந்த 9ம் தேதி பிரவசத்திற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் 10ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் 2 கிலோ 800 கிராம் எடையில் இருந்ததாக டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அந்த குழந்தை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 3 நாட்களாக தாய் மற்றும் உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை காண்பித்துள்ளனர். குழந்தை ஆரோக்கியமாகவே இருந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு தாயிடம் குழந்தை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பாலூட்டி திருப்பி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் காலை 7 மணி அளவில் அந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த காளிராஜ் குடும்பத்தினர் டாக்டர்கள், மற்றும் ஊழியர்களிடம் விபரம் கேட்டுள்ளனர். குழந்தை எடை குறைவாக இருந்ததாகவும், சளி தொல்லை இருந்ததாகவும் மஞ்சள் காமாலை நோய் தாக்கியதாகவும், பல்வேறு பதில்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் அலட்சிய போக்கே குழந்தை சாவுக்கு காரணம் என கூறி உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ஜோசப், சந்தானகு்மார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications