இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை ) கைது செய்தனர்.
இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி பிடித்துச் செல்வதாக அடிக்கடி புகார் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மார்ச் 3-ம் தேதி பிடித்துச் சென்றனர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 8 நாள்களுக்குப் பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து 48 கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பகுதில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள் சிலர் ஒரு படகில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்ததைக் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படைக்கு கண்டனர். இதையெடுத்து, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான நாகி தேவி கப்பல் அந்த படகை ஞாயிற்றுக்கிழமை பகல் 3 மணியளவில் சுற்றி வளைத்தது.
பின்னர், படகை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர் அதில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களையும் கைது செய்து தூத்துக்குடிக்கு அழைந்து வந்துள்ளனர்.
இதுகுறித்து கடலோர காவல் படை கட்டளை அதிகாரி அனந்தகுமார் கூறும்பொழுது, 'இந்திய கடல்பகுதியல் நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை கைது செய்துள்ளோம. அவர்கள் பயன்படுத்திய விசைப்படகும், அதில் இருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் திங்கள்கிழமை காலை தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவர்' என்றார்.