இலங்கையில் இனப் படுகொலையை நடத்தியதே இந்தியாதான்.… வைகோ

இலங்கை அதிபர் ராஜபக்சே மீதான மனித உரிமைக் குற்றங்களைக் கண்டித்து எண்ணூர் அசோக் லேலண்டு ஆலை தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வைகோ கலந்து கொண்டு பேசினார், அப்போது கூறியதாவது:
உலக நாடுகளில் போர்க்குற்றங்களுக்கு எதிராக பல நாடுகளின் ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் திட்டமிடப்பட்ட, கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையை இலங்கை நடத்தியது. இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா இலங்கையைக் காப்பாற்ற உலக நாடுகளை ஒன்று திரட்டுகிறது. இதற்கு காரணம் இலங்கையில் இனப்படுகொலையை நடத்தியதே இந்தியாதான். இந்த குற்றச்சாட்டிற்காக நான் தேசவிரோத குற்றம் சுமத்தப்பட்டு நான் தண்டிக்கப்பட்டால் மகிழ்ச்சியடைவேன்.
இந்த துரோகம் 1987-லேயே தொடங்கிவிட்டது. இந்திய அமைதிப்படைத் தளபதியை சந்திக்க பிரபாகரன் வரும்போது அவரைச் சுட்டுக் கொல்லும்படி இலங்கைக்கான இந்தியத் தூதர் தீட்சித் மூலம் அப்போதைய இந்திய அரசு உத்தரவிட்டது. இதை அந்தத் தளபதி எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளை ஒழிப்போம் எனக் கூறிக்கொண்டு அப்பாவிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்களைக் கொன்று குவித்துள்ளனர். ஆயுதம் வழங்கி, விமானத் தளங்களைப் புதுப்பித்து ரேடார்கள் மூலம் கண்காணித்து இந்தியா உதவி செய்தது.
இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது. தமிழகத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இவர்களுடைய தியாகத்தையடுத்து தற்போது மாணவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் மூலம் ஈழத்தமிழர்களின் வாழ்வு முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிடவில்லை. தமிழர்களின் வாழ்வுரிமையை நிலை நாட்ட பொதுவாக்கெடுப்பு நடத்தி தனிஈழம்பெற உலக நாடுகள் முன் வர வேண்டும். இதற்கான முயற்சிகளை உலகத் தமிழர்கள் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications