தள்ளாத வயதிலும் தனி ஈழம் கோரி வைகோவின் தாயார் உண்ணாவிரதம்
நெல்லை: தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த போராட்டத்தினை மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் அ.பழனிச்சாமி தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வை.ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
கலிங்கப்பட்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிறுவன் பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டம் குறித்து நம்மிடையே பேசிய தாயார் மாரியம்மாள், 1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த தோடு உணவளித்து உபசரித்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில், நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் தி.ப. சரவணன், இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி, மாநில மாணவர் அணிச் செயலாளர் கி.மு. ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.













Click it and Unblock the Notifications