கோவை அருகே ஒரே இரவில் 3 பேர் கொலை: சைக்கோ கைவரிசையா?
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பேருந்து நிலையத்தில் 3 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காரமடை பேருந்து நிலையத்தில், கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் நேற்றிரவு உறங்கிக் கொண்டிருந்த போது அவரை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.
இதே போல் காரமடை பேருந்து நிலையத்தின் பின் புறம் இருக்கும் முட்புதரில் இருந்தும் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ரமேஷ் அந்த பேருந்து நிலையத்தில் வழக்கமாக பச்சைக்குத்தும் தொழிலாளி என போலீஸ் முதல் கட்ட விசாரணை தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் தெரியவில்லை.
இந்த நிலையில் மூன்றாவதாக, பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் இருக்கும் ஒரு தெருவில் கட்டிட தொழிலாளி ஒருவரும் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
விசாரணையில் அவர் பெயர் சேகர் என்றும், தர்மபுரியைச் சேர்ந்த அவர் சில நாட்களாக அந்த கட்டிடத்தில் தங்கி வேலை பார்த்து வந்ததும், தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட மூன்று சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கொலை செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் பணமோ இல்லை பொருளோ ஏதும் கொள்ளை போகவில்லை. எனவே இந்த 3 கொலைகளிலும் குறிக்கோள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
ஒரு வேளை இந்தக் கொலைகளை சைக்கோ கொலையாளி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications