இலங்கையில் ராட்சத சவக்குழியில் 150 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு: ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியினருடையதா?

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 142 கிமீ தொலைவில் உள்ள மாத்தளையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றின் அருகே ராட்சத சவக்குழி கண்டிபிடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் கட்டுமானப் பணிக்காக நிலத்தை தோண்டிய போது ராட்சத சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 150 சடலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை 25 ஆண்டுகளுக்கு புன்பு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி மாத்தளை நீதிமன்றத்தில் நீதிபதி சதுரிகா டி சில்வா முன்னிலையில் கெலனியா பல்கலைக்கழக முதுநிலை அகழ்வாராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ராஜ்சோமதேவா, மாவட்ட மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி அஜீத் ஜெயசேனா ஆகியோர் தனித்தனியாக நேற்று முன்தினம் அறிக்கைகள் சமர்பித்தனர்.
அந்த அறிக்கையில், சடலங்கள் அனைத்தும் 1986-1990 கால கட்டத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்ட காலகட்டத்தை அறிய உதவும் கார்பன் டேட்டிங் சோதனை முடிவுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1988-89ம் ஆண்டுகளில் அப்போது ஆட்சி செய்த ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி உறுப்பினர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ நடவடிக்கையில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் தான் இந்த ராட்சத சவக்குழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி உறுப்பினர்களும் இந்த கருத்தை வலியுறுத்துகின்றனர்.
1987ம் ஆண்டில் அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவும், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இந்தியா-இலங்கை இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை எதிர்த்து தான் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியினர் கிளிர்ச்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications