ஈழத் தமிழருக்காக நடிகர் சங்கம் உண்ணாவிரதம் - ரஜினி, கமல் பங்கேற்றனர்!

இதில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜீத், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற விதம், படங்களாக வெளிவந்த பிறகு அதுவரை தமிழ் உணர்வாளர்களின் போராட்டமாக இருந்தது மக்கள் போராட்டமாக மாறிவிட்டது.
மாணவர்கள், பெற்றோர், பணியாளர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாலச்சந்திரன் படங்களை ஏந்தியபடி ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து வருகின்றனர். போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கூண்டிலேற்றி தண்டிக்க கோரி வருகின்றனர்.
தனித் தமிழீழம் ஒன்றே உரிய தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டதால், அனைத்துத் தரப்பினரும் தனி ஈழத்துக்கு ஆதரவாகத் திரண்டுள்ளனர்.
இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அனைத்து நடிகர்-நடிகைகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் தொடங்கியது.
இதில் ரஜினி, கமல் பங்கேற்றனர். அஜீத், சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ், பரத், விமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
நடிகர், நடிகைகள் பலர் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் படப்பிடிப்புகளில் இருந்தார்கள். அவர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பிவிட்டனர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பல அமைப்புகளும் பங்கேற்றன.
உண்ணாவிரத போராட்டத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் பந்தலும் மேடையும் அமைக்கப்பட்டது. கடும் வெயில் கொளுத்திய போதிலும் திரளான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications