தமிழகம் முழுவதும் புதிய 'மெகா' குடியிருப்புத் திட்டங்கள்.. ஜெயலலிதா அறிவிப்பு

சென்னைக்கு அருகிலுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் தற்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கைவசம் உள்ள நிலத்தில் முன்கட்டுமான தொழில்நுட்பம் என்ற நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 612 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,500 பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் (apartments) சுயநிதி திட்டத்தின் (self-financing scheme) கீழ் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் குடியிருப்புகள் 10 மாடிகளை கொண்டதாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்த வருவாய் பிரிவு, மத்திய தர வருவாய் பிரிவு, உயர் தர வருவாய் பிரிவினர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்படும்.
டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இந்த முன்கட்டுமான தொழில்நுட்பத்தை (pre casting) பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானத்தின் காலம் 25 சதவீதம் குறைவதோடு, கட்டுமானச் செலவும் 10 முதல் 15 சதவீதம் வரை குறையும்.
கட்டட பாகங்களான, தூண், உத்திரம், மாடிப்படி, கூரை ஆகியவைகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு உபயோகத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் உறுதிபடுத்தப்படும். கட்டுமானப் பாகங்கள் தயாரிக்கப்பட்ட பின் அவை கட்டுமான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு அதற்குரிய இடங்களில் இயந்திரங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டு கலக்கப்பட்ட திண்காரை கலவை மூலம் இணைக்கப்படும்.
24 மாடிகள் கொண்ட உயர் அடுக்குமாடி கட்டடங்களை இத்தொழில் நுட்பத்தின் மூலம் 24 மாதங்களில் கட்டலாம். கட்டுமானப் பாகங்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுவதால் கட்டடம் பார்ப்பதற்கு மிக நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும்.












Click it and Unblock the Notifications