சட்டசபையில் இடதுசாரிகள், தேமுதிக, புதிய தமிழகம் வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் சட்டசபையில் இருந்து தேமுதிக, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றனர். ஆனால் சபாநாயகர் அவர்களுக்கு அனுமதி தரவில்லை. சபாநாயகர் கூறுகையில், தினமும் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் எடுக்கப்பட்டு அதன் மீது ஜனநாயக முறைப்படி விவாதம் நடைபெறுகிறது என்றார்.இதற்கு இடதுசாரி எம்.எல்.ஏக்கள் கண்டித்து அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் சட்டசபையில் இருந்து அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல் சட்டசபையில் இன்று வேளாண்மை துறை மானிய கோரிக்கை மீது தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி பேசினார். அவர் 30 நிமிடங்கள் பேசிய பிறகு அடுத்த உறுப்பினரை பேச சபாநாயகர் அனுமதித்தார். ஆனால்தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சாந்திக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் சட்டசபையில் இருந்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.