போலீஸ் டி.எஸ்.பி, 12 கிராமவாசிகளை என்கவுன்டரில் படுகொலை செய்த வழக்கு- 3 பேருக்கு தூக்கு!
லக்னோ: 30 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் 12 கிராமவாசிகளை போலி என்கவுன்டரில் படுகொலை செய்த வழக்கில் 3 போலீசாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்தவர் கே.பி.சிங். கடந்த 1982-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி நள்ளிரவில் போலீசாருக்கும் சமூகவிரோதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாகிச் சண்டையின் போது போலீசாரின் துப்பாக்கி குண்டு பாய்ந்து கே.பி. சிங் உயிரிழந்தார். மேலும் 12 கிராமவாசிகளும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் குறி தவறி குண்டு பாய்ந்து கே.பி. சிங் இறந்து விட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் கே.பி. சிங்கின் மனைவி போலீசாரின் கருத்தை மறுத்தார். தமது கணவர் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கேபிசிங்கின் மனைவி புகார் கூறினார். ஆனால் போலீசார் என்கவுன்டர்தான் நடந்தது என்று மறுத்தனர். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்குத் தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
1984ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.1989 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி போலி என்கவுன்டர் மூலம் கே.பி.சிங் மற்றும் கிராமவாசிகளை படுகொலை செய்ததாக 19 போலீசார் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் விசாரணையின் போது 10 பேர் உயிரிழந்துவிட்டனர். 7 பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். ராம் நாயக் பாண்டே என்பவர் மட்டும் தற்போதும் பணியில் இருக்கிறார்.
கடந்த 30 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் சிபிஐ நீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பளித்தது. படுகொலை செய்யப்பட்ட கே.பி.சிங்குக்கு கீழே பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சரோஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்நாயக் பாண்டே, ராம்கரண் ஆகியோர் கே.பி.சிங்கை திட்டமிட்டு படுகொலை செய்ததால் மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications