ராகுல் காந்தியை நான் இதற்காகத்தான் சந்தித்தேன்... ஜி.கே.வாசன் விளக்கம்

சமீபத்தில் ராகுல் காந்தியை திடீரென போய்ப் பார்த்தால் வாசன். ஏற்கனவே அவர் தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை அவர் மறுத்து வருகிறார் என்றாலும் கூட செய்திகள் நிற்கவில்லை. அவரது தீவிர ஆதரவாளராக இருந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவும் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதால் அப்செட் ஆகி விட்டார் வாசன்.
இந்த நிலையில்தான் அவர் ராகுல் காந்தியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார் வாசன். அப்போது அவர் கூறுகையில்,
2 தினங்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தேன். அப்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து பேசினேன். முக்கியமாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினேன்.
மாநிலங்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.மேலும் இலங்கை தமிழர் பிரச்சினையிலே, குறிப்பாக வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற இருக்கிற காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டிய முயற்சியை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
தமிழக மீனவர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்குரிய பணிகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் என்றார் அவர்.
மேலும் அவர் பேசுகையில், இன்றைக்கு தமிழகத்துடைய அவசிய தேவை, அவசர தேவை மின்சாரம். கிராமங்களிலும், நகரங்களிலும் பல மணி நேரம் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் பெருமளவு தமிழக மக்களுடைய மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.
எனவே கூடங்குளம் அணுமின் நிலையம் உடனடியாக திறக்கப்பட வேண்டும். அதற்கு தடையாக இருப்பவர்கள் இனிமேல் போராட்டத்தை நிறுத்தி கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியிருக்கிறது. விஞ்ஞானிகளும், வல்லுநர்களும் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பதை நினைவு கூற விரும்புகிறேன் என்று கோரிக்கை விடுத்தார் வாசன்.












Click it and Unblock the Notifications