பொறுக்க முடியாத நெருக்கடியில் குஷ்பு?.. காங்கிரஸுக்கு செல்வது உறுதி??
சென்னை: திமுகவில் நடிகை குஷ்புவுக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கும் வராமல், சினிமாக்காரர்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தவறாமல் போய் வரும் அவருக்கு திமுகவில் நெருக்கடி அதிகரித்து வருவதால் அங்கிருந்து அவர் வெளியேறி காங்கிரஸில் புகலிடம் நாடலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
ஒரு நேரத்தில் பெரும் ஆரவாரத்துடன், குதூகலத்துடன் திமுகவில் வரவேற்கப்பட்டவர் குஷ்பு. அவரை திமுகவுக்குக் கூட்டி வந்ததில் கட்சித் தலைவர் கருணாநிதிக்கு பெரும் மகிழ்ச்சி.
சூட்டோடு சூடாக சட்டசபைத் தேர்தலிலும் குஷ்புவை பிரசாரக் களத்தில் இறக்கி விட்டனர். அவருக்கு கட்சியில் நல்ல முக்கியத்துவமும் தரப்பட்டது.
நேரம் சரியில்லையே
ஆனால் இப்போது குஷ்புவுக்கு நேரம் சரியில்லை. மு.க.ஸ்டாலின் குறித்து பேட்டி அளிக்கப் போக அவரை அடிக்கவே பாய்ந்து விட்டனர் திமுகவினர்.
குமுறியும் பலனில்லை
தனக்கு திமுகவுக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து கருணாநிதியிடம் குமுறல் வெளியிட்டும் கூட குஷ்புவுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் பெரும் வேதனையுடன் இருக்கிறாராம் அவர்.
காங்கிரஸ் மீது மோகம்
இதையடுத்து இனிமேலும் திமுகவில் நீடிப்பது உசிதமாக இருக்காது என்பதால் வேறு பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளாராம் குஷ்பு. அவரது பார்வை தற்போது காங்கிரஸ் மீது விழுந்துள்ளதாம்.
எல்லாம் பேசியாச்சாம்
காங்கிரஸ் கட்சியில் போய்ச் சேருவதற்காக பேச்சுவார்த்தைகளை கூட குஷ்பு பேசி முடித்து விட்டதாக சொல்கிறார்கள்.
ஈழ உண்ணாவிரதத்தையும் புறக்கணித்தார்
காங்கிரஸில் சேரும் திட்டத்தில் இருப்பதால்தான் நடிகர் சங்கம் நடத்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட குஷ்பு கலந்து கொள்ளவில்லையாம்.
மத்திய அரசை பகைக்க விருப்பமில்லை
இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டால் மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதால்தான் குஷ்பு அந்தப் பக்கமே தலை காட்டவில்லையாம்.
ஆனால் பிரபுதேவாவுடன் செம டான்ஸ்
அதேசமயம், ஏப்ரல் 2ம் தேதி ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்த பிரபுதேவா பிறந்த நாளின்போது அங்கு போய் விட்டாராம் குஷ்பு. அவருடன் சேர்ந்து செம ஆட்டமாம். உற்சாகத்துடன் போஸும் கொடுத்தாராம். உண்ணாவிரதத்திற்கு பிரபுதேவாவும் வரவில்லை என்பது தெரிந்ததே.
மொத்தத்தில் குஷ்பு ஒரு முடிவெடுத்து விட்டார் என்கிறார்கள்.. அந்த முடிவு அவருக்கு நல்லதா, கெட்டதா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
முதல்லயே காங்கிரஸுடன்தான் பேசினார்
கற்பு தொடர்பான பேச்சைக் கண்டித்து தமிழகம் முழுவதும் குஷ்பு மீது வழக்குத தொடர்ந்திருந்தனர். அந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் காங்கிரஸில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகின.
திடீரென திமுகவுக்குத் தாவினார்
ஆனால் கடைசி நேரத்தில் என்ன நடந்ததோ குஷ்புவை திமுக தட்டிப் பறித்துக் கொண்டது. இப்போது மீண்டும் காங்கிரஸ் பக்கம் குஷ்பு சாயப் போவதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.