மாணவர்கள் போராட்டத்தில் சிக்கியதன் எதிரொலி: சிதம்பரத்துடனான சந்திப்பை ரத்து செய்த மமதா

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, அம்மாநில நிதி அமைச்சர் அமித் மித்ராவுடன் நேற்று மாலை டெல்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவரை எதிர்த்து இடதுசாரி மாணவர்கள் கோஷமிட்டனர். கொல்கத்தாவில் கடந்த வாரம் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது இந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுதீப்தோ குப்தா தலையில் படுகாயம் அடைந்து மரணம் அடைந்தார். அவர் போலீசார் தாக்கியதில் தான் மரணம் அடைந்தார் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
சுதீப்தோ மரணம் ஒரு அல்பமான விஷயம் என்று மமதா தெரிவித்ததை எதிர்த்து தான் மாணவர்கள் கோஷமிட்டனர். அப்போது மாணவர்கள் அமித் மித்ராவை தாக்கினர். இதில் அவரது ஜிப்பா கிழிந்தது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மமதா திட்டக் கமிஷன் துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியாவை திட்ட ஆரம்பித்தார்.
இன்று மமதா மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அவர் இந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டார். மேலும் இன்றே கொல்கத்தாவுக்கு திரும்ப உள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக நேற்று மாலை 5 மணிக்கு நடைபெறவிருந்த செய்தியாளர் கூட்டத்தையும் மமதா ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications