மண்ணெண்ணெயை குறைத்து தமிழகத்தை மத்திய அரசு தண்டிக்கிறதா? பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டிலேயே செயல்படுத்தப்படும் பொது விநியோகத் திட்டங்களில் தமிழகம் மிகச் சிறந்த பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்ற காரணத்துக்காக மண்ணெண்ணெய் அளவைக் குறைத்து எங்களை மத்திய அரசு தண்டிக்கிறதா? என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தை மத்திய அரசு பாரபட்சமான முறையில் நடத்துகிறது என்பதற்கு உதாரணமாக மற்றொரு நிகழ்வை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். பொது விநியோகத் திட்டத்தில் தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவைப் பற்றியதாகும். தமிழகத்துக்கு மாதத்துக்கு 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால், இந்த மாதாந்திர ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவது தொடர்பாக மூன்று முறை கடிதங்களை எழுதியுள்ளேன். மேலும், இந்தப் பிரச்னை குறித்து தங்களிடம் அளித்த கோரிக்கை மனுவிலும் குறிப்பிட்டுள்ளேன்.

தொடர்ச்சியாகக் குறைப்பு: 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மாதாந்திர ஒதுக்கீடானது 52 ஆயிரத்து 806 கிலோ லிட்டராக இருந்தது. இதன்பின், 2012ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் அதன் அளவு 44 ஆயிரத்து 576 கிலோ லிட்டராகவும், அதற்கடுத்த காலாண்டில் 42 ஆயிரத்து 460 ஆகவும் மாதாந்திர ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன. இந்த அளவு மேலும் குறைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 39 ஆயிரத்து 429 ஆக இருந்தது.

இப்போது, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்துக்கு மாதாந்திர ஒதுக்கீட்டின் அளவு 29 ஆயிரத்து 60 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அளவுக்கு மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டும்தான். மற்ற மாநிலங்களில் மாதாந்திர ஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்படாமல் கடந்த கால அளவுகளே பின்பற்றப்படுகின்றன.

மண்ணெண்ணெய் அளவு ஒதுக்கீடு செய்யப்படும் முறைகள் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுகின்றன. மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் அளவானது, சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்தோ அல்லது அவை தரும் தகவல்களை வைத்தோ மேற்கொள்ளப்படுவதில்லை. எண்ணெய் நிறுவனங்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது என்றால், அந்தத் தகவல்கள் மாநில அரசுகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உரிய காலத்தில் மாநிலங்களின் கருத்துகளை அல்லது திருத்தங்களைப் பெறுவதே சரியாக இருக்கும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் தமிழகத்தைவிட அதிகமான எண்ணிக்கையில் பிற மாநிலங்களுக்கு கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படவில்லை.

தமிழகத்துக்கு மட்டும் மண்ணெண்ணெய் அளவு குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டு குறைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையானது தமிழகத்தை மட்டும் குறிவைத்து வஞ்சிப்பது ஏன் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது.

நாட்டிலேயே செயல்படுத்தப்படும் பொது விநியோகத் திட்டங்களில் தமிழகம் மிகச் சிறந்த பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்ற காரணத்துக்காக மண்ணெண்ணெய் அளவைக் குறைத்து எங்களை மத்திய அரசு தண்டிக்கிறதா?

தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவில் இருந்து இப்போது 55 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைத்துள்ளது. எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு தமிழகத்துக்குரிய முழு ஒதுக்கீட்டு அளவான 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

இடைக்கால அளவாக, 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் வழங்கப்பட்ட அளவான மாதத்துக்கு 52 ஆயிரத்து 806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்யை உடனடியாக வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் தங்களின் மேலான பதிலை விரைந்து எதிர்பார்க்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+