இந்த வருஷம் கனிமொழி.. அடுத்த வருஷம் சுதீஷ்: திமுக- தேமுதிக டீல்?
சென்னை: எதிர்வரும் ராஜ்யசபா தேர்தலில் திமுகவின் கனிமொழிக்கு தேமுதிக ஆதரவு கொடுக்கவும் அடுத்த ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஷுக்கு திமுகவினர் ஆதரவு கொடுக்கவும் இருதரப்பும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அதிமுகவின் மைத்ரேயன், இளவரசன், திமுகவின் கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானதேசிகன் ஆகியோரது பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகின்றது. இதனால் ராஜ்யசபா தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன.

வேறுவழியின்றி திமுக- தேமுதிக சீரியஸ் பேச்சுவார்த்தை
இம்முறை சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் 23 பேர்தான் இருக்கின்றனர். ஆனால் ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 33 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இதேநிலையில்தான் தேமுதிகவும் இருக்கிறது. அதிமுக ஆதரவுடன் எப்படியும் மனைவி பிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஷை எம்.பியாக்கலாம் என்ற கனவுடன் இருந்தார் விஜயகாந்த். சட்டசபையில் 29 எம்.எல்.ஏக்கள் பலம் இருந்ததால் நிச்சயம் ராஜ்யசபா சீட் உறுதி என காத்திருந்தார். ஆனால் இந்தக் கனவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அணி என்ற பெயரிலும் சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் என்ற ரீதியிலுமாக மண்ணை அள்ளிப் போட்டது அதிமுக. தற்போது தேமுதிகவுக்கு 18 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். 5 பேர் அதிருப்தி அணியிலும் 6 பேர் சட்டசபையில் இருந்து ராஜ்யசபா தேர்தல் வரை சஸ்பென்ட் செய்யப்பட்டும் இருக்கின்றனர். இதனால் வேறுவழியின்றி திமுக- தேமுதிக சீரியசாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை உருவானது.

முதல்ல நீங்க.. இல்ல இல்ல நீங்க...
இப்பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில், "தற்போது 1 ராஜ்யசபா சீட்டுக்கு திமுக ஆதரவு தெரிவித்தால் லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டிருக்கிறது. திமுக தரப்பிலோ, இப்போது நீங்கள் ஆதரவு தாருங்கள்.. லோக்சபா தேர்தலிலும் கூட்டு வைத்துக் கொள்வோம்..அடுத்த ராஜ்யசபா தேர்தலிலும் ஆதரவு தருகிறோம் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.

மீண்டும் மீண்டும் கனிமொழி...
இதனடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட பேச்சுவார்த்தைகள் தற்போது ஒரு முடிவை நோக்கி நகர்ந்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவைப் பொறுத்தவரையில் மீண்டும் எம்.பியாக வேண்டும் என்று கனிமொழியே விரும்பாவிட்டாலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் விடுவதாக இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால்தான் வேறுவழியின்றி கனிமொழியை இம்முறை எப்படியும் ராஜ்யசபா எம்.பி.யாக்கியாக வேண்டிய நிர்பந்தம் திமுகவுக்கு இருக்கிறது. இதனால் தேமுதிகவுடன் உறுதியான பேச்சுவார்த்தைகளை திமுக நடத்தி ஒருவழியாக இணக்கம் காண வைத்திருக்கின்றனர்.

அடுத்து பிரேமலதா அல்லது சுதீஷ்...
அதாவது தற்போதைய ராஜ்யசபா தேர்தலில் கனிமொழி நிறுத்தப்படும் நிலையில் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்ற எங்களது நெருக்கடியை புரிந்து கொண்டு ஆதரவு தாருங்கள் என்று கேட்க தேமுதிகவும் சரி என ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதாவது இந்த வருஷம் கனிமொழியை நிறுத்தி அனுப்புவோம்..அடுத்த ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் பிரேமலதா அல்லது சுதீஷை நிறுத்தி அனுப்புவோம் என்று ஒருவழியாக இருதரப்பும் பேசி முடித்திருக்கிறார்களாம்!












Click it and Unblock the Notifications