பொடுசுகளின் விபரீத விளையாட்டு... அமெரிக்காவில் 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் விளையாடும் போது தவறுதலாக, 4 வயது சிறுவன் சுட்டதில் படுகாயமடைந்தான் 6 வயது சிறுவன் ஒருவன்.
அமெரிக்காவில் 4 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு 6 வயது சிறுவனுடன் கடந்த திங்களன்று விளையாடி இருக்கிறான். இதில் எதிர்பாராதவிதமாக அந்த துப்பாக்கியிலிருந்த குண்டு 6 வயது சிறுவனின் நெற்றியில் பாய்ந்து இருக்கிறது.
இச்செய்தி சுட்டவனின் தாயாருக்கு தெரியவர, அவர் உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தெரிவித்து இருக்கிறார். அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும், சிறுவனின் பாதிப்புகள் குறித்த எந்த செய்தியும் இதுவரை வெளியிடப்படவில்லை. சிறுவன் இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
துப்பாக்கிகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவர நாடு தழுவிய விவாதங்கள் நடைபெறும் நிலையில் இதுபோன்று சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதனால், உயிருக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைக்கத்தவறிய பெற்றோர் மீது இப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
நம்ம நாட்டில் தொட்டுப் பிடித்து விளையாடுவார்கள்... அமெரிக்காவிலோ சுட்டு சுட்டுவிளையாடுகின்றனர். காலக் கொடுமைதான்!












Click it and Unblock the Notifications