உள்துறை அமைச்சர் ஷிண்டே வீட்டுக்குள் புகுந்து ரகளை... 142 பேர் கைது

நாட்டின் உள்துறை அமைச்சர் வீட்டுக்குள் புக முடியும் அளவுக்கு அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜாட் சமுதாயத்தைச் சேர்ந்த 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஷிண்டே வீட்டுக்கு திரண்டு வந்தனர். ஜாட் சமுதாயத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கோரிக்கை மனு வழங்குவதற்காக அவர்கள் வந்திருந்தனர்.
ஆனால் அமைச்சரை இப்போது பார்க்க முடியாது என்று வாயிலில் நின்றிருந்த பாதுகாவலர்கள் கூறி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கேட்டை திறந்து கொண்டு உள்ளே செல்ல அவர்கள் முயன்றனர். ஆனால் பாதுகாவலர்கள் அவர்களை அனுமதிக்கவி்ல்லை. இந்த நிலையில் சிலர் கடுமையாகப் போராடி கேட்டை திறந்து விட்டனர். இதையடுத்து திமுதிமுவென போராட்டக்காரர்கள் ஷிண்டே வீட்டுக்குள் பு்குந்தனர்.
வீட்டு வராண்டா வரைக்கும் வந்து விட்ட அவர்கள் அங்கேயே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்தபோது ஷிண்டே வீட்டில் இல்லை. மாறாக ரஷ்யா சென்றிருந்தார். இதை போராட்டக்காரர்கள் அறியவில்லை. இதுகுறித்து பாதுகாவலர்கள் சொல்லியும் அவர்கள் நம்பவில்லை.
ஷிண்டே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர். அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபடுவது, சட்டவிரோதமாக கூடி கலாட்டா செய்வது, அரசு ஊழியர்கலைத் தடுத்து நிறுத்துவது, அரசு ஊழியர்களை மிரட்டி அச்சுறுத்துவது, அத்துமீறி நுழைதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார்.
13 போலீஸார் சஸ்பெண்ட்
ஷிண்டே வீட்டு பாதுகாப்பு குளறுபடிகளைத் தொடர்ந்து பணியில் இருந்த 13 போலீஸார் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications