திருச்சி சிவா எம்.பி. வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை! பீகார் இளைஞர் மீது புகார்!!
திருச்சி: திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான திருச்சி சிவாவின் வீட்டில் 20 பவுன் நகையுடன் மாயமான பீகார் இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி கண்டோமெண்ட் ஸ்டேட் வங்கி காலனில் திருச்சி சிவானின் வீடு உள்ளது. ஆனால் திருச்சி சிவா மனைவியுடன் டெல்லியில் தற்போது தங்கியிருக்கிறார். அவரது மகன் சூர்யா மட்டும் இந்த வீட்டில் இருக்கிறார். இங்கு பீகாரைச் சேர்ந்த ராஜேஸ் என்பவர் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் சிவா எம்.பி. சார்பில் திருச்சி கோர்ட் போலீசில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் திருச்சி சிவா மனைவியின் 20 பவுன் நகைகள் மாயமாகி விட்டது என்றும் ஆனால் வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்படாமலும் இருந்தது கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நேரத்தில் சிவா எம்.பி.யின் வீட்டில் வேலை பார்த்து வந்த பீகார் இளைஞர் ராஜேஸ் தலைமறைவாகிவிட்டார்.
இதனால் அவர்தான் சிவா வீட்டில் நோட்டமிட்டு நகைகளுடன் மாயமாகி இருக்கிறார் என சந்தேகிக்கப்படுகிறது. அவரைப் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர் சிவா எம்.பி.யின் வீட்டில் நகை பணம் வைக்கும் இடங்களை தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளார். பின்னர் சாவியை எடுத்து நகையை திருடிக்கொண்டு மாயமாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications