குடிபடுத்தும் பாடு... ராத்திரியில் துப்பாக்கியால் சுட்டு போலீஸார் சண்டை.. சென்னையில் பரபரப்பு
சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தற்போது போலீஸ் அதிகாரிகள் குவிந்துள்ளனர். நேற்று இரவு இந்த பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.
சென்னை புதுப்பேட்டை சந்திரபானு தெருவில் ஒரு விடுதி உள்ளது. இங்கு கடலூரைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் இளமாறன் என்பவரும், ஆயுதப் படைக் காவலர் ஆனந்தகுமார் என்பவரும் தங்கியுள்ளனர். இளமாறன் கோர்ட் பணிக்காக கடலூரிலிருந்து வந்திருந்தார்.
நேற்று இரவு இவர்கள் இருவரும் மது போதையில் வாய்த்தகராறில் இறங்கினர். சண்டை முற்றி இருவரும் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். மேலும் தங்களது துப்பாக்கியை எடுத்தும் அடித்துள்ளனர். அப்போது திடீரென ஆனந்தகுமாரின் துப்பாக்கி வெடித்து, குண்டு இளமாறனின் தொடையில் பாய்ந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அந்த இடம் முழுவதும் போலீஸார் குவிந்தனர். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில்தான் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.