பழிக்குப் பழி… திருச்சி அருகே இரண்டு பெண்கள் வெட்டிக் கொலை
திருச்சி: திருச்சி அருகே முன் விரோதம் காரணமாக பழி வாங்கும் நோக்கில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த திண்ணியம் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 65). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இவருடைய நாத்தனார் அமராவதி (50). மேலத்தெருவில் வசித்து வந்தார்.
இவர்கள் குடும்பத்தினருக்கும் சுரேஷ் என்பருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் கடந்த 2011-ம் ஆண்டு செல்லம்மாள் மகன்கள் ராமகிருஷ்ணன், இளங்கோவன், ரவிச்சந்திரன் ஆகியோர் சுரேஷை தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுரேஷ் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இதனால் சுரேஷின் குடும்பத்தினர், செல்லம்மாள் குடும்பத்தினர் மீது மேலும் ஆத்திரத்தில் இருந்தனர்.
இதனையடுத்து கீழத்தெரு வீட்டில் தனியாக இருந்த செல்லம்மாளை நேற்று மாலை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். அதில் சம்பவ இடத்திலேயே செல்லம்மாள் உயிரிழந்தார்.
அப்போது அங்கிருந்த செல்லமாளின் உறவினர் சதீஷ் அந்த ஆசாமியை தடுக்க முயன்றார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அதன் பிறகு அந்த மர்ம ஆசாமிகள் மேல தெருவில் தனியாக இருந்த அவருடைய நாத்தனார் அமராவதியையும் வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் லால்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக திண்ணியம் கிராமத்துக்கு வந்த லால்குடி போலீசார், 2 பெண்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த சதீஷை சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் சுரேஷ் இறந்ததால் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். மேலும் அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரே ஊரை சேர்ந்த 2 பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.