ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி
தெஹ்ரான்: ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, குர்காவ்ன் உள்ளிட்ட இந்தியாவின் வட பகுதிகளும், பாகிஸ்தானும், வளைகுடா நாடுகளும் குலுங்கின.
இன்று மாலை 4.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு 8 ரிக்டர் புள்ளிகளாக இருந்ததாக அமெரிக்க நிலவியல் மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இது 7.6 முதல் 7.8 புள்ளிகளாக இருந்ததாக ஈரான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஈரானில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 40 பேர் வரை பலியாகிவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
டெல்லி, குஜராத், சண்டீகர் குலுங்கியது...
இந்தியாவில் இந்த நிலநடுக்கம் டெல்லி, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், சண்டீகர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இங்கு வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத்...
அதே போல பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத், ஹைதராபாத் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. அதே போல ஆப்கானிஸ்தானின் காண்டஹார் பகுதியும் இந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தது.
துபாய், ஷார்ஜா, அஜ்மான்...
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் உணரப்பட்டது. துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்கள் கட்டிடத்தை விட்டு தெருக்களில் காத்திருந்தனர்.
அரைமணி நேரம் கழித்து தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பினர்.
பஹ்ரைன், கத்தாரிலும்...
அதே போல பஹ்ரைனிலும் கத்தாரிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. இதையடுத்து அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கம் தெற்கு ஈரான்-பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண எல்லையில் கஷ் என்ற பகுிதியில் மையம் கொண்டிருந்தது. நிலத்துக்கு அடியில் 15.2 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி தான் ஈரானை 6.1 ரிக்டர் புள்ளிகள் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதும் அதில் 37 பேர் பலியானதும் நினைவுகூறத்தக்கது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தை விவரிக்கும் படம்:
கீழே உள்ள படம் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள படமாகும். இதில் நிலநடுக்கத்தின் தாக்கத்தின் அளவு விவரிக்கப்பட்டுள்ளது.