விவசாயிடம் லஞ்சம் கேட்ட வருவாய் ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை
மதுரை: மதுரையில் விவசாயிடம் லஞ்சம் கேட்ட வருவாய் ஊழியருக்கு கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நூதன தண்டனை வழங்கினார்.
மதுரை மாவட்டம் அண்டமான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நவநீத கிருஷ்ணன். வயலில், சொட்டு நீர்ப்பாசன வசதி அமைப்பதற்காக 'சிறு விவசாயி' என்ற சான்றிதழ் பெற மனைவி ருக்மணி பெயரில் தாலுகா அலுவலகத்தில் மார்ச் 11ம் தேதி விண்ணப்பித்தார். அங்குள்ள ஊழியர் ஒருவர், தன்னை, "கவனிக்கும்படி' கூறியதால் அவருக்கு நவநீத கிருஷ்ணன் 200 ரூபாய் கொடுத்தார். அந்த ஊழியரோ ரூ. 5,000 தந்தால் உடனே சான்றிதழ் தருவதாக கூறினார். தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என நவநீத கிருஷ்ணன் கூறியதால் சான்றிதழ் கிடைப்பது தாமதமானது.
இது குறித்து நவநீதகிருஷ்ணன் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தார்.
இருவரையும் வரவழைத்த கலெக்டர், விசாரணை நடத்தினார். "நவநீத கிருஷ்ணனுக்கு உடனே சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும், மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள சிறு, குறு விவசாயிகள் எத்தனை பேர் என கணக்கெடுத்து, விண்ணப்பித்தோர், விண்ணப்பிக்காதோர் என அத்தனை பேருக்கும் காசு வாங்காமல் வரும் 30ம் தேதிக்குள் சான்றிதழ்களை கொடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என, லஞ்சம் கேட்ட ஊழியருக்கு உத்தரவிட்டார்.
தண்டனையை கேட்ட ஊழியர் சற்றே மலைத்தாலும் உடனே செயலில் இறங்கிவிட்டார்.












Click it and Unblock the Notifications