திருச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து: கண்டக்டர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி
திருச்சி: சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருச்சி அருகே லாரி மீது மோதியதில் கண்டக்டர் உள்பட 3 பேர் பலியாகினர்
அரசு விரைவுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் நேற்று இரவு சென்னையில் இருந்து மதுரைக்கு கிளம்பியது. பேருந்தை பூமிநாதன் என்பவர் ஓட்டினார். மதுரையைச் சேர்ந்த தங்கவேல்(40) என்பவர் கண்டக்டராக இருந்தார்.
அந்த பேருந்து இன்று அதிகாலை 4.15 மணிக்கு திருச்சி நகர்ப்பகுதியான மன்னார்புரம் காந்தி நகர் அருகே இருக்கும் ராணுவ பயிற்சி மையம் அருகில் வேகமாக வந்தது. அப்போது முன்னாள் சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி திடீர் என்று நடுரோட்டில் நின்றது. அப்போது லாரி பின்னால் வந்த அரசுப் பேருந்து அதன் மீது வேகமாக மோதியது.
இதில் பேருந்தின் முன்பகுதி அடையாளம் தெரியாத அளவுக்கு சேதமடைந்தது. மேலும் முன்வரிசை இருக்கைகள் முற்றிலும் சிதைந்தன. இந்த விபத்தில் கண்டக்டர் தங்கவேல், மதுரை திருகோணத்தைச் சேர்ந்த செந்தில்ராணி(45) மற்றும் மதுரையைச் சேர்ந்த சரோஜினி(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 7 பயணிகள் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் இருக்கைகளுக்குள் சிக்கிக் கொண்டது. இதனால் தீயணைப்பு துறையினர் வந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் உடல்களை வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த லாரி சிமெண்ட் கலவையை ஏற்றிக் கொண்டு கடலூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றுள்ளது. லாரியை விருத்தாச்சலத்தைச் சேர்ந்த வீரமணி(23) என்பவர் ஓட்டியுள்ளார். செல்வராஜ் என்பவர் கிளீனராக இருந்தார். பாதை தெரியாமல் திருச்சிக்குள் நுழைந்த வீரமணி எந்த வழியாக செல்வது என்று தெரியாமல் யாரிடமாவது வழி கேட்க லாரியை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். அப்போது தான் பின்னால் வந்த பேருந்து மோதியது.
இதையடுத்து வீரமணி எடமலைப்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பேருந்து கிளம்பியதில் இருந்தே கண்டக்டருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. இதையடுத்து அவரைப் பற்றி டிப்போவில் புகார் கொடுக்க பயணிகள் தீர்மானித்தனர். ஆனால் அவர் இந்த விபத்தில் பலியாகினார்.












Click it and Unblock the Notifications