மகாவீரர் ஜெயந்தி: ஜெ., கருணாநிதி, விஜயகாந்த் வாழ்த்து
சென்னை: சமண சமய மக்களின் முக்கிய திருவிழாவான மகாவீரர் ஜெயந்தி நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மகாவீரர் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு. 599-இல் பிறந்தவர். சமண சமயத்தை போதித்த அவரது பிறந்தநாள் மகாவீரர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் கூறியுள்ளதாவது:
பகவான் மகாவீரர் அவர்கள் இளமையிலேயே தனது சுக வாழ்க்கையைத் துறந்து, இயற்கைச் சக்திகளோடு தனது வாழ்க்கை நெறிமுறைகளை இணைத்து, அகிம்சையைப் பின்பற்றி, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்று அற்ற நிலையைக் கடைபிடித்து வாழ்ந்தவர்.
அவரது வாழ்க்கையே அவரது போதனைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு அறநெறியினையும் ஆன்மிக நெறியினையும் தவறாது பின்பற்றியவர். மக்கள் அனைவரும் அன்னாரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, அமைதியான வாழ்வினையே நாடிட முற்பட வேண்டும்.
பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில் ஒவ்வொருவரும் மகாவீரரின் வாழ்க்கையையும் போதனைகளையும் மனதில் நிலைநிறுத்தி, அன்பின் வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று வாழ்த்தி ‘மகாவீர் ஜெயந்தி' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
இளமையிலேயே அரச வாழ்வைத் துறந்தவர்; தமக்குரிய செல்வங்களை எல்லாம் பலருக்கும் தானமாக வழங்கியவர்; கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, பேராசை கொள்ளாமை முதலிய நல்லறங்களைப் போதித்தவர்; தமது போதனைகள்படியே வாழ்ந்து காட்டியவர். இந்த ஆண்டின் மகாவீரர் பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஜைன சமய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் வாழ்த்து
அரச குடும்பத்தில் பிறந்தாலும் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக துறவறத்தை மேற்கொண்டவர் மகாவீரர். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும், எந்த உயிருக்கும் எத்தகைய தீங்கும் செய்யக் கூடாது என்பதும் அவர் வகுத்த நெறிகளுள் தலையாயது ஆகும்.
குறிப்பாக சமண சமயத்தை சேர்ந்தவர்கள் பொழுது போவதற்குள் உணவு அருந்துவர். ஏனெனில் விளக்கேற்றிதான் சாப்பிட வேண்டும் என்றால் அதில் விட்டில் பூச்சிகள் விழுந்து இறந்து விடக்கூடாது என்பதே அவர்களது நோக்கம். அந்த அளவுக்கு கொல்லாமையையும், புலால் மறுத்தலையும் வாழ்க்கை நெறியாக மேற்கொண்டவர்கள்.
அத்தகைய அருளாளரான மகாவீரர் பிறந்த நாள் 24.04.2013 அன்று வருகிறது. எல்லா மக்களுக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் தங்களால் இயன்ற உதவியை செய்து வாழ வேண்டும் என்பதே மகாவீரர் பிறந்த நாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய கொள்கையாகும்.
இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே என்பதை குறிக்கோளாக கொண்ட தேமுதிக இந்த நன்னாளில் மகாவீரர் காட்டிய நெறியில் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications