சென்னையில் திடீர் மழை…வெப்பம் தணிந்தது
சென்னை: சென்னையின் புறநகர்பகுதிகளில் பெய்துவரும் மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் இரண்டு வார காலம் இருந்தாலும் கடந்த ஒருவார காலமாகவே சென்னையில் வெயில் சுட்டெரித்தது. சதமடித்த வெயிலினால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மாலை நேரங்களில் கடற்கரையிலும், பூங்காக்களிலும் சென்று வெப்பத்தை தணித்தனர். வெயில் கொளுத்தினாலும் அவ்வப்போது மழை பெய்து வெயிலின் கடுமையை குறைத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே 12 மணியளவில் மிதமான மழை தொடங்கியது.

நிதானமாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அம்பத்தூர், கொரட்டூர், பாடி பகுதிகளில் பெய்யும் மழையினால் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது.
கொரட்டூர் பகுதிகளில் லேசாக பெய்த மழைக்கே தெருவெங்கும் தண்ணீர் தேங்கி சகதியாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், சிரமத்திற்குள்ளாகியுள்ளன. எனவே மண் சாலைகளை தார்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே வெப்பச்சலனம் காரணமாகவே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications