மத மோதல்களை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை: ஜெயலலிதா எச்சரிக்கை
சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஆறுமுகம் கோயம்புத்தூரில் மதரீயிலான பதற்றம் நிலவுவதை சுட்டிக் காட்டினார்.
முதல்வர் ஜெயலலிதா: கோயம்புத்தூரில் மத சம்பந்தமான பூசல்கள் ஏதுமில்லை. இரு மத்தினரிடையே அவ்வப்போது எழும் சிறு சிறு பிரச்சனைகள் குறித்து காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையாளர் இரு மதத்தினரையும் அழைத்து அமைதிக் கூட்டங்கள் நடத்தி அமைதிக் குழுக்களை ஏற்படுத்தி மத நல்லிணக்கம் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
மத பூசல்களை தூண்டிவிடுவோர் மீதும், ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பின்னர் கோவை பைன் பியூச்சர் நிறுவன மோசடி குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, இது தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்து இதன் நிர்வாகிகள் செந்தில்குமார், விவேக் மற்றும் நித்யானந்தம் ஆகியோர் கைது செய்து இதுவரை ரூ. 65 கோடி மதிப்புள்ள மோசடி சொத்துக்களை கைப்பற்றியுள்ளனர் என்றார்.
மேலும் காவல் துறையினர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பொதுவாக காவலர்கள், தலைமை காவலர்கள் சொந்த மாவட்டங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர். சொந்த ஊர் இருக்கும் காவல் நிலையத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவதில்லை.
உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சொந்த மாவட்டம் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நியமிக்கப்படுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வந்தால், அவர்களது நடவடிக்கைகளை கண்காணித்து பாரபட்சமாக நடப்பதாக தெரிய வந்தால் அவர்களை இடம் மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.