ஆக்ஷன் எடுக்க ஜீப்புக்கு டீசல் போடச் சொன்ன திருச்செந்தூர் பெண் எஸ்.ஐ.!
தூத்துக்குடி: மகளை கொடுமைப்படுத்திய மருமகன் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஜீப்புக்கு டீசல் போடுவியா என்று கேட்ட மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் வியாபாரி தூத்துக்குடி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் இடையன்விளை சவரித்த நாடார் குடியிருப்பைச் சேர்ந்த மீன் வியாபாரி சண்முகம் கலெக்டர் ஆசிஷ் குமாரிடம் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது 2வது மகள் முத்துமாரிக்கும், ஆறுமுகநேரியைச் சேர்ந்த லிங்கம் என்பவரது மகன் மஞ்சுநாதனுக்கும் கடந்த 12.09.2012 அன்று திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது எனது மகளுக்கு 12 பவுன் நகையும், ரூ.25,000 ரொக்கமும் கொடுத்தோம். திருமணத்திற்கு பின் எனது மகள் முத்துமாரியிடம் அவரது கணவர் மஞ்சுநாதன், மாமியார் தமிழ்வாசகம், மாமனார் லிங்கம், அவரது சகோதரர்கள் கார்த்திகேயன்-தேவி, கிருஷ்ணமூர்த்தி-மாரி ஆகியோர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கொடுக்காத எனது மகளை எனது வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டனர். இது குறித்து எனது மகள் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் நாங்கள் கொடுத்த புகாரின்பேரில் மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக நாங்கள் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரிடம் கேட்டதற்கு வண்டி(ஜீப்)க்கு டீசல் போடுவியா?, எப்.ஐ.ஆர் போட்டால் நீ என்ன செய்து கிழித்திடுவாய் என்று தரக்குறைவாக பேசி எங்களை திருப்பி அனுப்பிவிட்டார்.
அத்தோடு, மகளிர் போலீசார் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து பெயரளவிற்கு பொருளை வாங்கி எங்களிடம் கொடுத்து எங்களின் கையெழுத்தையும் மிரட்டி வாங்கிக் கொண்டனர். ஏழ்மை நிலையில் நான் வாழ்ந்து வரும் நிலையில், எனது மகள் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்திட தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் புகார் கொடுக்கச் சென்ற எங்களை தரக்குறைவாக நடத்திய மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications