பெரம்பலூர் அருகே திருடனை அடித்துக் கொன்ற கிராமத்தினர்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள கிராமத்தில் திருட வந்த நபரை ஊர் மக்கள் அடித்துக் கொன்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் மாரியம்மன் கோவில் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடக்கிறார் என்று கல்பாடி (வடக்கு) கிராம நிர்வாக அலுவலர் அருள்தாஸ் (30) மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தவர் துறைமங்கலத்தைச் சேர்ந்த பனையடியான் மகன் வடிவேல் (40) என்பது தெரிய வந்தது. வடிவேல் தனது நண்பர்கள் 3 பேருடன் பைக்கில் அந்த கிராமத்திற்கு திருட வந்துள்ளார். அப்போது கிராமத்தினர் அவர்களை சுற்றி வளைத்துவிட்டனராம். அப்போது வடிவேலுவின் நண்பர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம். சிக்கிய வடிவேலுவை கிராம மக்கள் தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிர் இழந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து அருள்தாஸ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் வேல்முருகன் (33), சேகர் மகன் பால்ராஜ் (20), ராமச்சந்திரன் மகன் ராஜாராம் (25), வேலாயுதம் மகன் முருகேசன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.