திருச்சி அருகே காவிரியில் மண்ணில் புதைந்து தாய்- மகள் உள்பட 4 பேர் பலி
திருச்சி: திருச்சி அருகே காவிரி ஆற்றில் மண்ணில் புதைந்து தாய்- மகள் உள்பட 4 பேர் பலியாயினர்.
திருச்சி மாவட்டம் பெருகமணி அருகே உள்ள நங்கவரம் கிராமத்தில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமானோர் இன்று காலை தீர்த்தக்குடம் எடுத்தனர்.
இதற்காக காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுப்பதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் பெருகமணி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துவிட்டு குடங்களில் தீர்த்தம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென உமாதேவி (35), அவரது மகள் தீபா (13), இவர்களது உறவினரான சிறுவன் ஜீவானந்தம் (7), பிரவீணா (22) உள்பட 5 பேர் மணலில் புதைந்தனர்.
மணலில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாமல் தண்ணீரில் மூழ்கினர். அங்கு கூடியிருந்தவர்கள் அவர்களை மீட்டு முதலில் பெருகமணி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பணியில் டாக்டர்கள் யாரும் இல்லை. இதையடுத்து அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி உமாதேவி, தீபா, ஜீவானந்தம், பிரவீணா ஆகிய நால்வரும் பலியாயினர். இன்னொரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications