''பிசி''க்கு ''ஏசி'' போட்ட தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரன்
தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் போக்குவரத்து போலீசார் பயன்பெறும் வகையில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் முக்கிய சிக்னல் சந்திப்புகளில் குளிர்சாதன வசதி கொண்ட கேபின்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன்படி தூத்துக்குடி-திருநெல்வேலி சாலையில் வி.வி.டி.சிக்னல் சந்திப்பில் சுமார் ரூ. 1,30,000 செலவில் அமைக்கப்பட்டுள்ள ஏசி கேபின் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் கலந்து கொண்டு ஏசி கேபினை திறந்து வைத்து பேசினார்.
போக்குவரத்து போலீசார் கடும் வெயில், மழையில் நின்று பணிபுரிவதை தடுக்கும்பொருட்டு தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து போலீசாருக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் ஏசி கேபின்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கேபின் உள்ளே இருந்தே போலீசார் சிக்னல் மற்றும் வாகனங்களை கண்காணிக்கலாம்.
ஏசியில் இருப்பதால் போக்குவரத்து போலீசார் கூடுதல் நேரம் பொறுப்புடன் பணிபுரிவார்கள். அதானாலேயே இதுபோன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்றார். ஏசி அறைக்குள் எஸ்.பி மட்டும் இருக்கலாம் நாம இருக்கக் கூடாது என்ற எண்ணம் பிசி(போலீஸ்) மத்தியில் வரலாம். இந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டே பிசி(போலீஸ்)க்கும் ஏசி போடப்பட்டுள்ளது. நான் மதுரையில் பணிபுரிந்தபோது இதுபோன்ற வசதியை செய்து கொடுத்தேன் இதனால் என்னை ''பிசி''க்கு ''ஏசி'' போட்ட எஸ்.பி.... என்று சொல்வார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
விழாவில் ஏ.எஸ்.பி., மகேஷ், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் மற்றும் காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.பி. ராஜேந்திரன் அரசியல் பிரமுகர்கள் வரிசையில் தூத்துக்குடியில் ஆங்காங்கே பொதுமக்களுக்கான நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்து தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.