தூத்துக்குடியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பால் வியாபாரி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பால் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் பெரிய செல்வம் நகரைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் மகன் மைக்கேல்ராஜ் (34). பால் வியாபாரி. அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை (பெயர், விவரம் வெளியிடுவதை தவிர்த்துள்ளோம்) ஏமாற்றி கற்பழித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்து அறிந்த மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கேட்டபோது மைக்கேல்ராஜ் பெயரை கூறியுள்ளார் மாணவி. இதையடுத்து மாணவியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மைக்கேல்ராஜை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.