சாதி மோதல்களை தடுக்க ராமதாஸ்- திருமா மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும்: வைகோ
சென்னை: மரக்காணம் கலவரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கருத்தரங்கில் பங்கேற்குமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து அக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரை சனிக்கிழமை சந்தித்து திருமாவளவன் அழைப்பு விடுத்தார். அதுபோல தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இதனிடையே திங்கட்கிழமையன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது அலுவலகமான தாயகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான அறிக்கையை வைகோவிடம், தொல்.திருமாவளவன் அளித்தார்.
மேலும் கடந்த ஓராண்டாக தலித்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் பற்றிய வீடியோ கவரேஜ்களையும், செய்திகளையும் வைகோவிடம் அளித்தார் திருமாவளவன். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.
பி.எஸ். ஞானதேசிகனுடன் சந்திப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஆகியோரை திங்கள்கிழமை திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.
திருமாவளவன் உடனான சந்திப்புக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், மரக்காணம் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
அதேபோல் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராமதாஸ்-திருமாவளவன் இணைந்து செயல்பட வேண்டும்-வைகோ:
இந் நிலையில் இன்று மரக்காணம் அருகே நிருபர்களிடம் பேசிய வைகோ, நான் இரு பிரிவு மக்களையும் சந்தித்து சமாதனம் செய்வதற்காகத்தான் மரக்காணத்துக்கு வந்தேன். போலீஸார் இப் பகுதியில் பிரச்சனையை தவிர்ப்பதற்காக மரக்காணம் பகுதியில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். தடையை மீறி இப் பகுதிக்குள் நுழைய நான் விரும்பவில்லை.
வட தமிழ்நாடு அமைதியாக இருந்தது. கடந்த தேர்தலில் ராமதாஸும், திருமாவளவனும் ஒருங்கிணைந்ததை பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
திருமாவளவன் ராமதாஸுக்கு 'தமிழ்குடிதாங்கி' என்ற பட்டத்தை வழங்கினார். ராமதாஸும் திருமா எனது 'அன்புக்குரிய தம்பி' என்றார். இதனால் இரு பிரிவு மக்களுக்கும் ஒற்றுமையாக இருந்தனர்.
தற்போது நிலைமை மாறி ஜாதி மோதல்கள் உருவாகின்றன. எனவே வடதமிழ்நாட்டில் சாதி மோதல்களை தடுக்க ராமதாஸும், திருமாவளவனும் மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications