தர்மபுரியில் 2 டாஸ்மாக் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
தர்மபுரி: தர்மபுரி அருகே 2 டாஸ்மாக் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அருகே உள்ள இண்டூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே 2895 என்ற எண் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் யாரோ பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் மதுக்கடை தீ பிடித்து எரிந்தது.
அப்போது அருகில் இருந்த திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் பார்த்து சத்தம் போட்டு கொண்டு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
மே தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து செவ்வாய்கிழமை (30-ந் தேதி) இரவு 10 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று அதிகாலையில் மர்மநபர்கள் சில டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் பாம் வீசியுள்ளனர்.
இதேபோல் பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையிலும் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அந்த கடையும் தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் குறித்தும் இண்டூர், மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications