ஒகேனக்கல்லில் நண்பரை காப்பாற்றும் முயற்சியில் 4 பெங்களூர் இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பலி
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் மூழ்கி பெங்களூரைச் சேர்ந்த 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
பெங்களூர் கோரமங்களா ஏஜே காலனியைச் சேர்ந்த 14 இளைஞர்கள் ஒகேனக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்தனர்.
ஒகேனக்கல் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் தண்ணீர் அதிகம் வரும் பகுதியைத் தேடிச் சென்றுள்ளனர் இவர்கள்.
ஒகேனக்கல் அருவியிலிருந்து சிறிது தொலைவில் உள்ள கூடுதுறை மணல்திட்டு பகுதிக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஜெகதீஷ் என்ற இளைஞர் நீச்சல் தெரியாமல் ஆழமானப் பகுதிக்குச் சென்று சிக்கிக் கொண்டார். அவரது அலறல் சப்தம் கேட்டு உடனிருந்த நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
இதில், நாகேஷ் (25), விஜி (26), ராஜீவ் (25), நந்தா (22) ஆகிய நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று ஜெகதீஷை காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்கினர்.
ஆனால், மற்ற இளைஞர்களால் ஜெகதீஷ் காப்பாற்றப்பட்டு கரைக்கு தூக்கி வரப்பட்டார். தகவலறிந்து, தீயணைப்பு வீரர்களும், ஒகேனக்கல் போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப் பணியை விரைவுபடுத்தினர்.
இதுதொடர்பாக, ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications